அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும் 

திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்’ என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம்  அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும்  இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி  ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது.  தமிழர்களைப்  பொறுத்த வரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுக்களாகவே தம் சமூகத்தை உருவாக்கியுள்ளனர். மேலைநாடுகளில் சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில், வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு அகமணமுறை சார்ந்திருந்த பல சமூகங்களில் தற்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்து வருகின்றபோதும், வேறு சில சமுதாயங்களில் இம்முறை இன்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம். குறிப்பாக சாதிய அல்லது வர்ண நிலவரங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பாக மட்டுமன்றி சாதியத்தின் தொற்றுவாயிலும் அகமணத்தன்மை காணப்படுவதை அம்பேத்கர் தன்னுடைய மானிடவியல் ஆய்வின் மூலம் கண்டறிந்தார்.

மொத்தச் சாதிய இருப்பின் அடிநாதமே ‘அகமணங்கள்’ (Endogamous nature) தான் என்கிறார் ’மானிடவியலாளர்’ அம்பேத்கர். தன்னுடைய காலத்திற்கு முன்பு காலனிய ஐரோப்பியரும், கீழைத்தேய ஆய்வாளர்களும் சாதியின் ‘பிறப்பு’ பற்றிச் சொன்னவற்றை, ஆதாரங்களுடன் மேவிச்சென்றார். அவர் அதுவரைகாலமும் இருந்த புறவயமான ஆய்வுகளில் இருந்து விலகி சாதியை அகவயமாகப் புரிந்துகொள்ளும் வழிகளைத்திறந்தார். அகமண முறைகளே சாதியின் தோற்றத்திலும் தொடர்ச்சியிலும் பெருத்த பகுதியை வைத்திருக்கின்றன என்ற அவருடைய ஆய்வும் வாதமும் முக்கியமானது. அவர் கலப்பு மணத்தின் இன்மையே சாதியைப் பாதுகாக்கிறது என்கிறார். கெட்கர் விளக்கிய கலப்புமணத்தடை, பிறப்பிலேயே ஒவ்வொருத்தரும் பிறந்த குழுவிற்கு உறுப்பினராகிவிடும்தன்மை என்பவற்றின் இயல்புகளை சாதிய நிலவரங்களைப்பாதுகாக்கும் முக்கிய ஏற்பாடுகள் என்பதை அம்பேத்கர் வலியுறுத்துகின்றார்.

இந்திய வர்ணக் கோட்பாட்டை அடியாகக் கொண்ட சாதிய அமைப்புக்களின் ஏனைய தாங்கு தூண்களின் அடிப்பாகமாக அகமணமே இருந்து வருகின்றது. குறிப்பாக  அகமண முறைமையைப் பாதுகாப்பதன் மூலம் சாதி தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதை நுட்பமாக அவதானிக்க வேண்டும்.  முன்பு சதி (உடன் கட்டை ஏறுதல்) ,குழந்தைத்திருமணம் , கட்டாய விதவை முறை என்பன இவ் அகமண அமைப்பினைப் பாதுகாக்கும் கூறுகளாக இருந்தன. 

இந்த அகமணம் நீடிக்கவேண்டுமெனில் குறித்த குழுவிற்குள்ளே சம எண்ணிக்கை தொடர்ச்சியாகப் பேணப்படவேண்டும். எனவே இச்சமநிலையை ஒழுங்குபடுத்தும்போது இந்த அம்சம் நிறைவு காண்கிறது. மணம் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் ஒரேநேரத்தில் இறப்பதற்குச் சாத்தியமில்லை. கணவன் இறந்துபோனால் பெண் கூடுதலாக நிற்கிறாள். அத்தருணத்தைக் கையாளாவிட்டால் அவர் அக்குழுவைத் தாண்டிச்சென்று அகமண வழக்கத்தைக் குலைப்பாள். அதற்காக அவளை விதவையாக்குவதும் உடன்கட்டை ஏற்றுவதும் நடக்கிறது. அவனுக்கு பருவமெய்தாத பெண்ணை மணம் முடிப்பதும் தானேவந்து பிரம்மச்சரியம் ஏற்பதும் நடக்கிறது. அவ்வாறு குலஒழுங்குகளிலிருந்து சாதிக்கான இயல்புகளைத் தொடங்கும் அம்பேத்கர், பிற்கால நடைமுறைகளில் அவை மெல்ல நடைமுறை இழப்பதை விளக்குகிறார். பெண்ணொருத்தி கணவனை இழந்தால் அவள் அவனுடன் தீக்குள் இறக்கிறாள், கணவன் மனைவியை இழந்தால் ‘பிரமச்சரியம்’ கடைப்பிடிக்கிறான். இம் மானுடப்பிறழ்வுகளும்,  சாதியை விட்டு விலகி வேறு வர்ணங்களுடன் மணத்தொடர்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதைப்பாதுகாக்கும் பொறிமுறைகளாகும். இவ்விடத்தில் ஒரு பெண்ணை அடக்கி வைப்பது மூலமே அகமணம் வழக்கம் காப்பாற்றப்படுகிறது என்று அம்பேத்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் சாதி உருவான முறை என்பதாக மட்டுமில்லாமல் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவந்த முறைமையாக அகமணம் இருப்பதை அவர் விளக்கியிருக்கிறார்.

. இவ்விடத்தில் இந்து மதமும் அதன் மூல நூல்களும் எடுக்கும் பாத்திரம் பெரியது.  மனுஸ்மிருதி திருமணங்கள் எவ்வாறு நடக்க வேண்டும் யார் யாரைத்திருமணம் செய்ய வேண்டும் என்பதை வர்ணப்பாகுபாட்டைப்பாதுகாக்கும் விதமாக  ‘உயர் குடி மணம்’ ’தாழ் குடி மணம்’ என்பவற்றை  அனுலோம (இயற்கைக்கு உகந்தது), பிரதிலோம (இயற்கைக்கு ஒவ்வாதது) என்று வரன்முறை செய்கின்றது. பிராமணர்கள், சத்திரியர்கள் போன்ற ஒடுக்கும், சுரண்டும் உயர்குடிகளின் வாழ்வை உறுதி செய்யவும்  வைசிக, சூத்திரர்களை ஒடுக்கவுமாக திட்டமிட்டு இந்து மூல நூல்கள் அகமண முறையை கடுமையாக வலியுறுத்துகின்றன.

பிராமணியத்தின் பரவுகை, நாட்டார் வழிபாட்டு முறைகளிடம் இருந்த ‘சடங்கியல் தலைமையைப்’ பறித்துக்கொண்டதைப் போலவே திருமணத்திலும் சடங்கியல் தலைமையையும் கட்டமைப்பையும் தங்களுடைய பிறழ்வான சாதிய நடைமுறையைப்பாதுகாக்கும் அமைப்பாகவே மாற்றியது.  மனு, உலகின் பெரிய அழிவே வர்ணதர்மத்தின் அழிவு என்றும், உலகின் பெரும் தீமை வர்ணக்கலப்புத்தான் என்கிறது.

மத அமைப்பிற்கும் சாதி அமைப்பிற்கும் பழக்கப்படுத்தப்பட்ட சமூகத்தின் மன அமைப்பு சிந்திக்காதவண்ணம் கடவுளின் பெயராலும், பிறப்பின் பெயராலும் மனுதர்மம் போன்ற சித்தாந்தங்கள், பிராமணீய சத்திரிய நலன்களையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் முகமான வர்ண சித்தாந்தங்களை நிறுவி, புராண இதிகாசங்கள் மூலம் அதற்கான தொன்மக்கதைகளை உற்பத்தி செய்து சமூக அமைப்பை வர்ண ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவந்தது.

எழுத்தாளர் பிரேம் கட்டுரை ஒன்றில் வர்ண அமைப்பினை வலியுறுத்தக் கூடிய இந்து மூல நூல்களில் ஒன்றான ’கீதை’ சொல்லப்பட்ட இடமென விபரிக்கப்பட்டும் பாரதப்போர்க் காட்சியை இவ்வாறு வாசிப்பார்,

|மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர்க்காட்சி இங்கு இந்திய வேத நூலாகக் கொண்டாடப்படும் பகவத்கீதை பிறக்கிறது. இதை இந்திய மன அமைப்பின் ஒரு பகுதியாகக் கொண்டால் இந்திய வாழ்வியல், அறவியல் பற்றிய முழு அடிப்படையுமே இதற்குள் மறைந்திருக்கிறது என்று கூறலாம். அர்ச்சுனன் போர்க்களத்தில் தனக்கு முன்னே நிற்கும் அனைவரையும் பார்க்கிறான். சில வினாடிகள்தான். அவனால் போர் செய்ய முடியவில்லை. மனம் பதை பதைக்கக் கருவிகளைத் தளரவிட்டு சோர்ந்து போகிறான். ஏனெனில் எதிரே இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லப்போவதன் துடிப்பு. அவனுக்குத் தேர்ப்பாகனாக வரும் கண்ணன் அர்ச்சுனனைப் போர் செய்யத்தூண்டுகிறான். இந்தக்காட்சியைப் பலரும் பலவாறு  விபரித்திருக்கிறார்கள். போரின் அவலம், தான் செய்யப்போகும் கொடுமையின் பதைபதைப்பு, தான் என்ன செய்ய வேண்டும் என்ற அறத்தவிப்பு எனப்பல்வேறு விளக்கங்கள். ஆனால் கீதையில் அர்ச்சுனன் பாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் தவிப்புகள் மனிதக் கொலைகள் மீதான அவலம் அல்ல, வேறொன்று. அர்ச்சுனன் சொல்கிறான் ‘இதோ எதிரே நிற்கும் அனைவரும் நமது குலத்தைச் சேர்ந்த ஆண்கள். இவர்களைக் கொல்வதன் மூலம் நமது குலம் சிதறிப்போகும் ஆண்கள் அழிந்தால் நமது குலப்பெண்கள் (வேறுகுலத்தவருடன் கலந்து) தூய்மை அழிவார்கள். பெண்களின் குலத்தூய்மை அழிந்தால் சமூக ஒழுங்கும் வர்ண தர்மமும் அழியும் எனவே நான் இந்தக் கொடுமையைச் செய்ய மாட்டேன்’  அதற்கு கண்ணன் அப்படித்தர்மம் அழிய விடமாட்டேன். ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து, அதர்மத்தை (வர்ணக்கலப்பை அழிப்பேன்) என உறுதி வழங்கிக் கொலைக்குத் தூண்டுகிறான். எவ்வளவு பெரிய அழிவையும் விட வர்ணதர்மத்தின் அழிவேமிகப்பெரிய அழிவாகவும், இந்திய மனத்தின் மிகப்பெரும் அச்சமாகவும் செயற்படுவதை நாம் அறிந்துகொள்ள முடியும் |

(பிரேம், பின்னநவீனத்துவம், பிறகான மாக்சியம், பக் 178-179 )

மதங்களின் வழிவந்த இதிகாசங்கள் புராணங்கள் கடவுளர்களின் ’கந்தர்வ மணங்களை’ விபரிக்கின்றன. சமூக ஒழுக்கம் திணிக்கப்பட்ட பெண்களை, தேவர்களும் கடவுளர்களும் ‘கந்தர்வ மணம்’ புரியவும், ஏமாற்றவும், பாலியல் அறங்களை மீறும் உரித்தைப் பெறுகின்றனர். இத்தொன்மங்களுக்குரிய நடைமுறை நியாயங்களை மதங்களின் மூல நூல்கள் கற்பிதப்படுத்துகின்றன. இதிகாசங்கள் புராணங்கள் அகமண முறையை மனிதர்களுக்கும், கட்டற்ற தன்மையினை கடவுளர்களுக்கும் கதாநாயகர்களுக்கும் வழங்கும் அபத்தத்தை இச்சமூகம் கொண்டாடிக் கொள்ளுமாறு அவர்களின் மன அமைப்பை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். 

ஒரே நிலத்தைப்பகிர்ந்துகொள்கின்ற பிராமணர்களின் திருமணச்சடங்கு கடவுளர்களுக்கு நிகழ்த்தப்படும் ‘திருக்கல்யாணத்தை’ ஒத்திருக்கிறது. ஆனால் பிராமணர் அல்லாதோரின் சடங்குகள் அப்படியில்லாது இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழ்ச்சமூகம் ஆதியில் வர்ணப்பாகுபாடு இல்லாத சமூகமாக இருந்து வந்தது. அதனுடைய கோத்திரங்களும் குடிகளும் சாதியமற்ற பண்பாட்டுக்குப் பழகியிருந்தனர். ஆனால் சாதியத்தின் வருகையுடன் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அதிகாரங்களின் மீது சாதியம் ஏறி அமர்ந்துகொண்டது. இந்து மதம் அதை ஒழுங்கமைத்தது. அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தின் திருமண முறைகளுக்குள்ளும் அதுசார் சமூக அமைப்புக்குள்ளும் சாதி புகுந்தது. சாதியின் பெரிய பாதுகாப்பான திருமணம் அதுசார் சடங்களில் சாதி இறுக்கமான விதிகளை வகுத்து ‘வர்ண மன அமைப்பை’ உருவாக்கியது.

ஈழமும் அகமணமும்

தமிழ்ச்சமூகத்தில் குறிப்பாக ஈழத்து தமிழ்ச்சமூகத்தின் அகமண அமைப்பு பெண்ணின் பெயரில் இருக்கும் சொத்தையும், உரித்தையும் பாதுகாக்கும் பொறிமுறையைச் சாதியிடமே ஒப்படைத்தது. கூடவே சீதண முறையும் அக மண முறைக்கு உரமிட்டது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்கும் சாதிய அமைப்புக்களின் அகமண முறையைத் தமக்குள் கொண்டிருக்கின்றார்கள். மதத்தின் வழியாகப் பெற்ற சடங்கியல், போலச்செய்தல் பயில்வுகளின் ஊடாக  இடைநிலைச்சாதியினரும் சரி, ஒடுக்கப்படுகின்ற சாதியினரும் சரி தமக்குள் அகமண முறையைப் பேண வேண்டியிருக்கிறது. 

பால், பாலியல் உரிமைகளை, சுதந்திரத்தை சமூக ஒழுக்கம் என்னும் பெயரில் குறித்த சாதிய, வர்க்க நலன்களுக்காக ஒழுங்கமைத்தது. பாலியலின் சடங்கான, சமூக அங்கீராத்தைக் கோரக்கூடிய மண நிலைமையை கட்டுப்படுத்தி ‘அக’ நியதிகளை மீறாமல் பாதுகாப்பதில் சாதிய, வர்க்க, சமய, ஆணாதிக்க மன அமைப்புக்களின் பண்புகளும் நடைமுறைகளும் பங்கெடுத்தன.

நன்றாகக் கவனித்தால் ஆணாதிக்க சமூக ஒழுங்கு அகமணமுறையில் ஆண்களுக்கே சலுகைகளையும் தளர்வுகளையும் வழங்குவதையும் பெண்களை ஒடுக்கும் அதிகபட்ச நடைமுறைகளைக் கையாள்கின்றது. பெண்ணைப் புனிதமாக, தாய்மையாக, தெய்வத்தன்மையாக கற்பிதப்படுத்துவதன் மூலம், அவளைச் சொத்தாக, தூய்மைவாதத்தின் சடப்பொருளாக முன்நிறுத்துகின்றன. அவளுடைய மானுட உரித்தை ஒடுக்குகின்றன. கணவனை இழந்தால் பெண்ணை தீயினுள்ளும் விதவை நோன்பினுள் தள்ளுகின்றன. ஆணுக்கு வாழ்க்கைக்குரிய வேறு வாசல்களைத்திறந்து விடுகின்றன. விதவை முறைமை ஒழிக்கப்பட்ட பிறகும் ’மறுமணம்’, சுதந்திரமான துணைத்தெரிவு, பாலியல் சுதந்திரம் என்பவற்றை ஒடுக்கியபடிதான் உள்ளது. ஏனெனில் சொத்து, சாதிய புனிதம், கலாசார குறிபீடு என்பனவற்றைச் சுமக்கும் பண்டமாகப் பெண்ணை மாற்றுகின்றது. இந்த வரலாற்றிப்பின்னணியில் இலங்கையில் தாக்கத்தைச் செலுத்திய பிராமணியத்தின் மேற்சொன்ன ஒடுக்குதல் கூறுகள் இலங்கைக்கு வரும் போது வேறுவடிவங்களைப்பெற்றன என்பதையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக பெளத்த, காலனிய நிலமைகள் அதிகாரத்தில் இருக்கும் போது வரலாற்றில் பிராமணீயத்தினால் இலங்கையில் பெருமெடுப்பில் தலையெடுக்க முடியவில்லை. 

இலங்கையில் பிராமணியம்  அதிகார பீடத்தில் இல்லாவிட்டாலும், இந்துக்கள் திருமணத்தில் கடுமையான அகமண அமைப்பினையே பின் பற்றுகின்றனர். அதிகாரத்தில் இருக்கின்ற ‘வெள்ளாளர்’ களையும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. மதம், ஆணாதிக்கம், சாதி இவை மூன்றும் இணைந்து அகமண அமைப்பினை அண்டாது செய்கின்றன. மதம், சமூகத்தகுதி, சொத்துடமை எல்லாமே அதிகாரத்துக்கும் ஆதிக்கத்திற்குமான அடிப்படைகளாக இருக்கின்றன என்பார் அம்பேத்கர்.  

ஈழத்தில் ஆணவக்கொலைகள் போன்ற கடும் ஒடுக்கு முறைகள் இல்லாவிட்டாலும் அகமணத்தன்மையை மீறி கலப்புத்திருமணம் செய்யும் போது குடும்பப்புறக்கணிப்பு, சமூகப்புறக்கணிப்பு, சொத்துரித்து மறுப்பு, உளவியல் நெருக்கடி என்பவற்றைச் சமூகம் தாராளமாக வழங்குகின்றது. பேசிச்செய்கின்ற திருமணங்கள் தொண்ணூறு வீதத்திற்கு மேலே ஒரே சாதிய, வர்க்க நிலைமைகளின் பேரம் பேசுதல்களின் ஊடாக அகமணத்தை பயில்வில் வைத்திருக்கவும் செய்கின்றன. சாதிய மனநிலை ஊறிய மனங்களும் சமூகப்பயத்துடன் இருக்கும் மனங்களும் காதல் என்று வரும் போது கூட சாதிய நிலமையை ஒருமுறை  உமிழ்ந்து விழுங்கிய பிறகே ‘காதலைத்(!) தொடங்கும் அபத்தமும் உள்ளது. 

உறவினர்களை உருவாக்குதல், அவற்றின் பரம்பரை மரத்தினைப் பேணுதல் சாதிய அகமணத்தினாலும் பேணப்படுகின்றது. யாழ்ப்பாணத்துச் சாதியத்தைப் பற்றி எழுதும் போது மைக்கல் பாங்ஸ்

’’ஒவ்வொரு சாதியும் பெயரிடப்படாத புனைவான், அகமணக்கட்டுடைய அலகுகளாக உள்ளார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பல்வேறு கிராமங்களிற் சிதறிவாழும் கணிசமான குழுக்களை உள்ளடக்கியது. இவை இடுகுறிப்பெயர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் இனப் பொதுவியல்பான பெயர்களும் அற்றவையாகும். ‘என்னுடைய சொந்தக்கார’ எனும் வெளிப்பாடு ‘எனது உறவினர்’ என்ற நேரடியான அர்த்தம் தரும். அது எனது சாதியைச் சார்ந்தவர்களைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.’’

(பனுவல் இதழ் 07, பக் 08) 

ஈழத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு தளங்களில் செல்வாக்கு மிக்க புலமாக உள்ள  ‘புலப்பெயர்வாளர்கள்’ வேறு அரசியல் பண்பாட்டுச்சூழலுக்குள் சென்றாலும் கலப்புத்திருமணம் அரிதாகவே இருந்தது. அவர்கள் சாதிய, சமய நம்பிக்கைகளை வேறொரு நிலத்திலும் பண்பாட்டிலும் பின்பற்ற வே திருவுளம் கொண்டனர். ஆனால் அங்கு பிறந்து வளரும் அடுத்தடுத்த தலைமுறைகள் இவற்றை குடும்ப அமைப்பு சாதிய அகமணப்பேணுகையின் பெரிய பாத்திரத்தை எடுக்கிறது அது ஆதிக்க மனநிலை வழங்கியவற்றை உணர்ச்சிப்பாங்கோடு உறவுக் கற்பிதங்களால் செய்து முடிக்கின்றது . குடும்பம்; திருமணம் என்ற ஆதாரத்தின் மீது அமைந்திருக்கிறது என்றார் ஏங்கல்ஸ். திருமணத்தின் மீது குடும்பமும் குடும்பத்தின் மீது திருமணமும் கொண்டுள்ள இயக்கத்தில் அகமணமும் சாதிய, வர்க்க நலன்களும் தங்களின் வேர்களை விரவி ஓடியிருக்கின்றன.

சாதிய அகமணத்தோடு இணைந்திருக்கும் மற்றொரு கூறு புவியியல் சார் அகமணத்தன்மையாகும். குறித்த குழுக்கள் குறித்த நிலத்தில் வாழும் குழுக்களுடன் திருமணம் செய்து கொள்ளும் மரபினைப் பேணுகின்றன. மேலும் இடைநிலைசாதியினரும் சரி, தாழ்த்தப்படும் சாதியினரும் சரி, ஒடுக்கும் சாதியினரைப்போல் மாற வேண்டும் என்ற போலச்செய்யும் அல்லது அதே போன்ற மாற்றை உருவாக்கும் நடை முறைக்குள் செல்லும் மனநிலையோடு இருக்கும் பண்புகளைத் திருமணத்திலும் அவதானிக்கின்றோம். அவர்கள் பொருளாதாரம் ஈட்டுவதன் ஊடாக வர்க்க மேன்நிலையாக்கமும், ஒடுக்கும் சாதிக்குழுக்களுடன் கலப்புத்திருமணங்களைச் செய்வதன் ஊடாக அவர்களின் மனநிலைக்குள் சென்று சேரவும் சாதியை ஒழிக்காமல் அதை ‘மேன்நிலையாக்கம்’ செய்யவும் விரும்புகின்றனர். 

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த திருமணச்சடங்குகளின் பல்தன்மை, சடங்குகளில் , மரபுகளில் இருந்த ‘சோறுகொடுத்தல்’ , முதலான திருமணச்சடங்குகள் அழிந்து போயுள்ளன. அவை அகமண முறைமையை வியாபித்த, தங்களை உயர் குடிகளாகக் காட்டிக்கொண்ட பிராமணீய சடங்கியல் அதிகாரத்தினால் கபழீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. ஈழத்தில் பிராமணர்களிடையே ‘திருமணம்’ முதலான மங்கலச்  சடங்குகளுக்கு உரியவர்கள், மரணம் முதலான அமங்கலச்சடங்குகளுக்கு உரியவர்கள் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. 

ஒரு வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் மரபுரித்துகளைச் சடங்குகளை அகமண முறையைப் பின்பற்றும் சாதிய அமைப்பைப் பின்பற்றும்  தங்களையே ஒடுக்கும் குழுக்களைப் போலச்செய்தும், அவர்களினால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட தளைகளுக்குள் சிக்கிக்கொண்டும் இழந்து போயுள்ளனர். பழய தொல்குடிச் சமயங்கள், வழக்குகள், திணை வாழ்வு என்பவை, தருகின்ற தொல், இலக்கியச்சான்றுகள் சாதிக்கு முந்திய சமூகத்தில் இருந்த ஒடுக்குதல் அற்ற சுதந்திரமான காதல் வாழ்க்கையை விபரித்துச்செல்கின்றன.

இலங்கையில் ஈழ விடுதலைப்போராட்டங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் போராட்டத்தில் அதிகாரம் மிக்க அமைப்பாக மாறியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்களுடைய அமைப்பின் கொள்கைகளில் சமய, சாதிப்பாகுபாடுகளை புறக்கணித்தனர். நடைமுறையுலும் அவை இயலுமான அளவு பயிலப்பட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களோ, அவர்கள் சார்ந்து திருமணம் முடிப்பவர்களோ சமய சடங்குகள் அற்று புலித்தாலி, மோதிரமாற்று, கைக்கடிகாரம் மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக திருமணத்தை மேற்கொண்டனர். இங்கே சாதிய அகமண முறைக்கெதிரான பண்புகள் அதிகரித்ததுடன் கலப்புத்திருமணங்களும் நடக்க சமூக வாய்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததை இங்கே அவதானித்தே நகர்ந்து செல்ல வேண்டும்.

இலங்கையைப்பொறுத்தவரையில் வட இலங்கைக்கு என்று குறிப்பிட்ட அகமணத்தன்மைகளும், கிழக்கிற்கு என்று அகமணத்தன்மைகளும், மத்திய மலைநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளிகள் இந்திய, சாதிய அகமண முறைகளையே பின்பற்றுவர், முஸ்லீம்களிடையே சாதிய நிலமை காணப்படாவிட்டாலும் அங்கே வர்க்க அகமணத்தன்மை செறிவாக உள்ளது. சிங்கள மக்களிடையே சாதிய அமைப்பு நிலவுவதுடன் சாதிய, வர்க்க அகமணத்தன்மை உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் அதனுடைய அகமணத்தன்மை மானுடவியல் கண்களுடன், முன்னேறிய கோட்பாடுகளின் சமகாலத்தன்மைகளுடன் அணுகப்பட்டது குறைவாகவே இருக்கின்றது.

இலங்கையின் தமிழ் கிறிஸ்தவ சூழலிலும் சாதிய நிலமைகளும் அகமணமும் நிகழ்கின்றது, கிறிஸ்துவ திருச்சபையின் அதிகாரம் இன்று வரையும் ‘கிறிஸ்தவ வெளாளர்’ களிடமே உள்ளது. கிறிஸ்தவம் சாதிய அமைப்பினை ஏற்காவிடினும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்த கிறிஸ்தவத்திற்கும்  சாதியமும் அகமண மரபும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதமும் சடங்கும் சடங்கியல் தலைமையும் மாறினாலும் சாதிய நீக்கம் செய்வதும் கைவிடுவதும் பெரும் சவாலாகவே இருப்பதை அவதானிக்கிறோம். 

தமிழ்ச்சூழலில் இணையேற்பு, சுயமரியாதைத் திருமணம் போன்ற சொற்கள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன. மேலும் தற்பாலீர்ப்பாளர் மணங்களுக்கு அல்லது இணையேற்பிற்கு இந்தியாவில் சட்ட பூர்வ அனுமதி கிடைத்திருக்கிறது.  இலங்கையில் அத்தகைய தற்பாலீர்ப்பாளர்களின் மணமும் குடும்ப வாழ்வும் அங்கீகரிக்கப்பட வேண்டும். சாதியும் சமயமும் தலைக்குள் உழன்று கொண்டிருக்கும் இச்சமூகத்தைச் சிந்திக்கவும்  பன்மைத்தன்மையை, கலப்பு மானுட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் பழக்க வேண்டும். ஒடுக்குதலற்ற சுதந்திரமான உடலையும் கருத்தையும் மக்கள் அடைய வேண்டும்.

சமூக அமைப்புக்களின் திருமணச்சடங்குகளும் அதுசார் கருத்தியல்புகளும் பன்முகமானவை, இங்கே அப் பல்தன்மைகள் அதிகாரமிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. ஒடுக்க கூடிய சாதிய, சமய அடிப்படையில் எழும், அவற்றைப்பாதுகாக்கும்,  அகமணங்களைப் பேணுகின்ற சமூகங்கள் மையத்தில் இயங்கும் போது அவற்றின் ஒடுக்குமுறை அரசியல், பொருளாதார, பண்பாட்டு மேலதிகாரம் என்பவற்றை எதிர்க்கவும் வேண்டியுள்ளது.

கலப்புத்திருமணங்கள் பற்றிப்பேசும் போது நடைமுறையில் சாதிய, வர்க்க கலப்பு நடைபெறுவதற்கான பெரிய புள்ளியாக ‘காதலைக்’ கருதினால், ஒரு குறித்த சமூகத்தைச்சேர்ந்த ஆண் பெண் உடல்கள் காதல் வயப்படுதலிற்கான பாலியல் தேர்வும், பழக்க வழக்கமும், ஒழுக்க நடைமுறைகளும், நம்பிக்கைகளும் தனிப்பட்ட இரண்டு உடல்களுக்குள் இயங்கு விதத்தை குடும்பம், சமூகச்சூழல், பொருளாதாரம் முதலானவையே தீர்மானிக்கின்றன. அதற்கு மதம், சாதி என்பன அதிகாரக் கற்பிதங்களையும்,  மரபார்ந்த நம்பிக்கைகளையும் கொடுக்கின்றா. இங்கே வெவ்வேறு அடையாளங்களை, இயல்புகளைக் கொண்டிருக்கின்ற உடல்கள் சந்திப்பதற்குரிய சூழமைவைக் கொண்டுவருவதற்கு பொருளாதார சமத்துவமும், சுயமரியாதையும் சமதர்மமும் கொண்ட சமூகத்துக்கான பயணத்தில் பங்கெடுக்க வேண்டும். சாதிய, சமய, ஆணாதிக்க பண்புகளற்ற கலப்புத்திருமணங்களோ,  இணையேற்புகளோ வெறுமனே அதிர்ச்சி மதிப்பீடுகளோ சாகசங்களோ அல்ல அவை அபூர்வமாக நிகழ்வதில் இருந்து இயல்பாக நிகழ்வதற்கான வழி முக்கியமானது.

யதார்த்தன்

Leave a Comment

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’